வீட்டின் மீது ஏறி தகரம் சரி செய்த போது விபத்து: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

வீட்டின் மீது ஏறி தகரம் சரி செய்த போது மின்கம்பி மீது தவறி விழுந்த விபத்தில், மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

Update: 2020-11-26 00:20 GMT
பூந்தமல்லி, 

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஷபாஜ் அலாம் (வயது 26). கட்டிட தொழிலாளியான இவர், கோயம்பேடு, மெட்டு குளம் பகுதியில் வசித்து கட்டிட வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இடைவிடாத மழை பெய்ததால், இவரது வீட்டிற்குள் தண்ணீர் ஒழுகி கொண்டு இருந்தது. இதையடுத்து, அவர் நேற்று காலை வீட்டின் மீது ஏறி தகரம் சரி செய்யும் வேலையில் ஈடுபட்டார். அப்போது திடீர் என்று கால் தடுமாறி அருகில் இருந்த மின்சாரம் கம்பியில் விழுந்தார்.

அப்போது மின்சாரம் தாக்கி சம்பவம் இடத்தி லேயே மின் கம்பியில் தொங்கிய நிலையில் இறந்து போனார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மின்சார கம்பியில் தொங்கியபடி இறந்து கிடந்த வாலிபர் உடலை மீட்க கடும் சிரமப்பட்டனர். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதியில் மின் தடை செய்தனர். இதையடுத்து தொழிலாளியில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மின்கம்பியில் தவறி விழுந்து தொங்கியபடி தொழிலாளி இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்