விவசாயியை அரிவாளால் வெட்டி பணம், செல்போன் பறிப்பு காரில் வந்த 2 மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

கல்லக்குடி அருகே விவசாயியை அரிவாளால் வெட்டி விட்டு, பணம் மற்றும் செல்போனை பறித்துச்சென்ற, காரில் வந்த 2 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-11-29 01:53 GMT
கல்லக்குடி,


திருச்சி மாவட்டம் கல்லக்குடி அடுத்த கல்லகம் கிராமத்தில் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் விவசாயி கிருஷ்ணன் (வயது 67). இவர் நேற்று அதிகாலை 5 மணியளவில் கொள்ளுமேடு கிராமத்தில் உள்ள தனது உறவினர்களை அழைத்து வர தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

நத்தமாங்குடி அருகே உள்ள நந்தியாறு பாலத்தில் சென்றபோது, 2 மர்ம நபர்கள் வெள்ளை நிற காருடன் நின்று அவரை வழி மறித்துள்ளனர். அப்போது கிருஷ்ணன், நீங்கள் யார்? எதற்காக என்னை மறிக்கிறீர்கள்? என்று கேட்டார்.

அரிவாளால் வெட்டி பணம் பறிப்பு

அதற்கு அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி, கிருஷ்ணனின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.1,500 மற்றும் செல்போனை பறித்துள்ளனர். அப்போது கிருஷ்ணன் எதிர்க்கவே அவர்கள், அரிவாளால் அவருடைய தலை, கையில் வெட்டியுள்ளனர். பின்னர் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து அவர்கள் தப்பி சென்று விட்டனர்.

இதில் படுகாயமடைந்த கிருஷ்ணன், உடனே கல்லக்குடி போலீஸ் நிலையத்துக்கு சென்று இதுபற்றி புகார் செய்தார். பின்னர் சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரியில் அவரை போலீசார் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர், கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை அரிவாளால் வெட்டிவிட்டு பணம், செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்