திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரம்ம தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடந்தது.

Update: 2020-11-30 18:12 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரம்ம தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவ நிகழ்ச்சி
மகாதீபம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக விழா நாட்களில் காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உலாவும், இரவில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் உலா கோவில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நேற்று முன்தினம் மாலை 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்டது. அன்று அதிகாலையில் கோவிலி்ல் பரணி தீபம் ஏற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு கோவிலில் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது.

தெப்பல் உற்சவம்
பின்னர் பஞ்சமூர்த்திகள் உற்சவ உலா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. வழக்கமாக அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக தெப்பல் உற்சவம் நிகழ்ச்சி பிரம்ம தீர்த்த குளத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சந்திரசேகருக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சாமி உற்சவம் பிரம்ம தீர்த்த குளத்திற்கு கொண்டு வரப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் தெப்பல் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இ்ன்று (செவ்வாய்க்கிழமை) பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், நாளை (புதன்கிழமை) சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவ உலாவுடன் தீபத்திருவிழா நிறைவு பெறுகிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்