அன்னவாசலில் ஓட்டல் மீது புளியமரம் சாய்ந்தது 10-க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்

அன்னவாசலில் ஓட்டல் மீது புளியமரம் சாய்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக 10-க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்.

Update: 2020-12-01 00:26 GMT
அன்னவாசல்,

அன்னவாசல் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி அருகே ஓட்டல் ஒன்று உள்ளது. இங்கு நேற்று சமையல் பணியாளர்கள், சாப்பிட வந்தவர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். ஓட்டலின் அருகே சாலையோரம் புளியமரம் ஒன்று இருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை அன்னவாசல் பகுதியில் லேசான மழை பெய்தது. அப்போது அந்த புளியமரம் திடீரென ஓட்டல் மீது சாய்ந்தது.

இதில், ஓட்டலின் முன் பகுதி நொறுங்கியது. உடனே, ஓட்டல் ஊழியர்களும், சாப்பிட வந்தவர்களும் அலறியடித்து பின்புறம் வழியாக தப்பி ஓடி உயிர் பிழைத்தனர்.

அகற்றம்

இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழிஅரசு, கிராம நிர்வாக அலுவலர் ரகுராம், நெடுஞ்சாலைதுறை ஆய்வாளர் சகாயமேரி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ஓட்டலின் மீது விழுந்த புளியமரம் வெட்டப்பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்