பஸ்-லாரி மோதல்: திருமண கோஷ்டியினர் 27 பேர் காயம் கெலமங்கலம் அருகே விபத்து

கெலமங்கலம் அருகே பஸ்-லாரி மோதிக் கொண்ட விபத்தில் திருமண கோஷ்டியினர் 27 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2020-12-01 04:05 GMT
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் சுல்தான்பேட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 50 பேர், நேற்று ஓசூர் பத்தலப்பள்ளியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு ஒரு பஸ்சில் சென்றனர். அங்கு திருமண விழாவை முடித்து விட்டு அவர்கள் நேற்று மாலை மீண்டும் கெலமங்கலத்திற்கு பஸ்சில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கெலமங்கலம் அருகே மஞ்சளகிரி பக்கமாக அந்த பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரி திடீரென்று வலதுபுறமாக திரும்பியது. இதில் லாரியும், பஸ்சும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த கெலமங்கலம் பகுதியைச் சேர்ந்த திருமண கோஷ்டியினர் ஆரியா (வயது 19), பர்வீனா (35), சபானா (54), சுஜிதா (55) உள்பட 27 பேர் காயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கெலமங்கலம் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்றனர். அவர்கள் விபத்துக்குள்ளான பஸ் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்