வடமதுரை அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து தம்பதி பலி

வடமதுரை அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2020-12-01 06:16 GMT
வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பழைய சித்துவார்பட்டியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 50). இவர், வடமதுரை ரெயில் நிலைய சாலையில் கடை வைத்து பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். நேற்று மாலை தனது மனைவி சண்முகபிரியாவுடன் (37) ஒரு சரக்கு ஆட்டோவில் திண்டுக் கல்லுக்கு வந்து கொண்டிருந்தார்.

சரக்கு ஆட்டோவை பால்ராஜ் ஓட்டினார். திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சரக்கு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ, தாறுமாறாக ஓடியது.

தம்பதி பலி

பின்னர் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பில் சரக்கு ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு ஆட்டோவுக்குள் சிக்கிய கணவன்-மனைவி 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் விரைந்து சென்று, இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரக்கு ஆட்டோவில் சென்ற தம்பதி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்