மங்களமேட்டில் மரத்தில் வேன் மோதி கவிழ்ந்தது; பெண்கள் உள்பட 11 பேர் படுகாயம்

மங்களமேட்டில் மரத்தில் வேன் மோதி கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2020-12-01 23:54 GMT
மங்களமேடு,

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை நகரை சேர்ந்தவர் டில்லிபாபு(வயது 29). இவர் குடும்பத்தினருடன், ராமேசுவரம் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு ஒரு வேனில் திருமழிசையில் இருந்து புறப்பட்டார். வேனை டில்லிபாபு ஓட்டினார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் மங்களமேடு மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் இருந்த புளியமரத்தின் மீது வேகமாக மோதி கவிழ்ந்தது.

இதில் வேனில் இருந்த ராதிகா(37), ரேவதி(32), சாந்தி(45), சீனிவாசன்(58), ராஜேந்திரன்(26), நாகேஸ்வரி(40), சுந்தரி(40) உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட ஆயுதப்படையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் புண்ணியமூர்த்தி, ஏட்டு ரவி மற்றும் போலீஸ்காரர் ஆனந்த் ஜெயராஜ் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு, 11 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற செய்தனர்.

பாராட்டு

இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் சிக்கியவர்களை ஒரு மணி நேரம் போராடி மீட்ட போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்