வங்கக்கடலில் புயல்: கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் புயல் உருவாகி உள்ள நிலையில் கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து 10 நாட்களாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Update: 2020-12-02 04:16 GMT
கடலூர் முதுநகர்,

தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதையடுத்து, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் உள்ள துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

நேற்று காலை இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புயலாக மாறியது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இது கடலூர் துறைமுக பகுதியில் திடீர் காற்றோடு, மழை பெய்யக்கூடும் என்ற வானிலை பாதிப்பை, தெரிவிப்பதாகும்.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது, இது இலங்கை கடற்கரை பகுதியை கடந்து கன்னியாகுமரி கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மீன்பிடி தொழில்

புயல் காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் உருவான நிவர் புயல் காரணமாக நேற்று வரை 10 நாட்களாக கடலூர் துறைமுக பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதுபற்றி மீனவர் ஒருவர் கூறுகையில், புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுரைப்படி, நாங்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்கவில்லை. கடந்த 10 நாட்களாக மீன்பிடிக்க செல்லாததால், எங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்து உள்ளது. மேலும் இதை சார்ந்துள்ள தொழிலாளர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்துள்ள ஐஸ் கட்டி தயாரிப்பவர்கள், வியாபாரிகள் உள்பட பலர் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார். இதனால் கடலூர் துறைமுகம் பகுதி வெறிச்சோடி இருப்பதை காணமுடிகிறது.

மேலும் செய்திகள்