தாழக்குடி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு மீன்பிடிக்க சென்றபோது பரிதாபம்

தாழக்குடி அருகே குளத்தில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-12-04 06:17 GMT
ஆரல்வாய்மொழி,

தாழக்குடி அருகே கனகமூலம் புதுகுடியிருப்பை சேர்ந்தவர் நாராயணன் என்ற நாராயண பெருமாள் (வயது 70), தொழிலாளி. இவருக்குபிரம்மசக்தி என்ற மனைவி உள்ளார். நாராயணன் அந்த பகுதியில் உள்ள புல்லுகுறிச்சி குளத்தில் நேற்று முன்தினம் வலை போட்டு மீன் பிடிக்க சென்றார். அதன்பிறகு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால், அவருடைய மனைவி அதிர்ச்சி அடைந்தார். பின்னர், குளத்து பகுதிக்கு சென்று தேடினார். அங்கு அவருடைய பொருட்கள் அனைத்தும் கரையில் இருந்தது. ஆனால், அவரை காணவில்லை.

இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் துரை தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குளத்தில் இறங்கி நாராயணனை தேடினர். சுமார் 2 மணி நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

பிணமாக மீட்பு

நேற்று காலை தீயணைப்புத்துறையினர் மீண்டும் குளத்தில் தேடினர். அப்போது, குளத்தில் உள்ள பாசிக்கிடையே நாராயணனின் உடல் சிக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். விசாரணையில், மீன்பிடிக்க சென்றபோது, பாசிகளில் சிக்கிய நாராயணன் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஆரல்வாய்மொழி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்