கறம்பக்குடி, அறந்தாங்கி, நெடுவாசல் பகுதிகளில் மழையினால் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

கறம்பக்குடி, அறந்தாங்கி, நெடுவாசல் பகுதிகளில் தொடர் மழையினால் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

Update: 2020-12-06 00:29 GMT
வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் கீழ்பாதி, மேல்பாதி பகுதிகளில் புரெவி புயல் காரணமாக, பெய்த மழையால் நெற் பயிர்கள் சேதமடைந்து வீணாக போய் உள்ளது. இப்பகுதிகளில் குறுவை சம்பா நெல் சாகுபடி சுமார் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ளனர்.

ஏற்கனவே நெடுவாசல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் பிரச்சினை, அதற்கு அடுத்து கஜா புயல், தற்போது புரெவி புயலால் இப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் அரசு வேளாண் துறை மூலமாக பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இழப்பீடு வழங்க வேண்டும்

மேலும் கடந்த முறை கஜா புயலின் போது ஏற்பட்ட சேதங்களுக்கு கூட தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வில்லை என்றும், இந்த முறையாவது முறையாக சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பயிர் காப்பீடு செய்துள்ளதாகவும் எனவே மழையால் சேதமடைந்துள்ள பயிர்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறந்தாங்கி

அறந்தாங்கியில் புரெவி புயலால் கடந்த 3 தினங்களாக காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்தது. இதனால் அறந்தாங்கி அருகே விஜயபுரத்தில் பயிரிட்டு நெற் கதிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் அதிகாரிகள் பயிர்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில் மழையினால் நெற் பயிர்கள் சேதம் குறித்து வேளாண்மைதுறை அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டுள்ளனர்.

கறம்பக்குடி

கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை கிராமத்தில் பெய்த கன மழையால் விளைந்த நெற் கதிர்களை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையுடன் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்