மனைவியை சித்ரவதை செய்த போலீஸ்காரர் உள்பட 8 பேர் மீது வழக்கு

திருமணமான 2 மாதங்களில் வேறு பெண்ணுடன் உள்ள தொடர்பால் மனைவியை சித்ரவதை செய்த போலீஸ்காரர் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-12-12 23:40 GMT
போலீஸ்காரர்
தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்தவர் மாரியப்பன். நீலகிரி மாவட்டத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வரும் இவருக்கும் விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்த உமா மகேஸ்வரி என்ற சூர்யா (வயது 29) என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 22 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் உமா மகேஸ்வரியின் தந்தைக்கு தென்காசி மாவட்டம் குறிஞ்சாகுளத்தைச் சேர்ந்த ஜெயமாலினி என்ற பெண் தனக்கும் போலீஸ்காரர் மாரியப்பனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அந்தப் பெண் சில புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த உமாமகேஸ்வரி இதுபற்றி தனது கணவர் போலீஸ்காரர் மாரியப்பனிடம் கேட்டபோது அவர் அது பற்றி பேசக்கூடாது என்று கூறியதுடன் சித்ரவதை செய்தாராம். இதனை தொடர்ந்து உமாமகேஸ்வரி தனது மாமனார் மற்றும் தனது கணவர் மாரியப்பன் சகோதரர் ஊத்துமலையில் போலீஸ்காரராக 
பணியாற்றும் மகேந்திரன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் சித்ரவதை செய்துள்ளனர். மேலும் ஜெயராணியும் உமா மகேஸ்வரியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

வழக்கு
இதுகுறித்து உமாமகேஸ்வரி விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் போலீஸ்காரர் மாரியப்பன், அவரின் சகோதரர் போலீஸ்காரர் மகேந்திரன், மகேந்திரன் மனைவி உமா மகேஸ்வரி, மாமனார் பரமசிவன், மைத்துனர் சந்திரசேகரன், அவரது மனைவி மகராசி, ஜெயராணி, அவரது உறவினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்