மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 833 வழக்குகளில் ரூ.8¾ கோடிக்கு சமரச தீர்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 833 வழக்குகளில் ரூ.8 கோடியே 74 லட்சத்து 72 ஆயிரத்து 281 மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது.

Update: 2020-12-13 15:55 GMT
கிருஷ்ணகிரி,

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக நேஷனல் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.

கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.கலைமதி தலைமை தாங்கி பேசியதாவது:-

மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகளில் சமரச தீர்வு காணலாம். இரு தரப்பினரையும் அழைத்து பரஸ்பரம் பேசி முடிவு காணப்படும். இதன் மூலம் பல்வேறு வழக்குகளில் உடனடியாக தீர்வு காண முடியும். இதை வழக்குகளை நடத்துபவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி கே.அறிவொளி, விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.அன்புசெல்வி, சிறப்பு மாவட்ட நீதிபதி டி.வி.மணி, கூடுதல் மாவட்ட நீதிபதி ஆர்.விஜயகுமாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ஏ.தமிழ்செல்வன், வக்கீல் கமல்நாதன் மற்றும் வழக்குகளை நடத்துபவர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 11 அமர்வுகள் அமைக்கப்பட்டு 1,618 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 833 வழக்குகளில் ரூ.8 கோடியே 74 லட்சத்து 72 ஆயிரத்து 281 மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது.

மேலும் செய்திகள்