சென்னை தொழில் அதிபர் வீட்டில், போலீஸ் போல நடித்து நகை, பணம் கொள்ளையடித்த கும்பல் கைது

சென்னை தொழில் அதிபர் வீட்டில் போலீஸ் போல நடித்து நகை, பணம் கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-12-19 23:07 GMT
போலீஸ் போல நடித்து...
சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் பாண்டியன். தொழில் அதிபரான இவரது வீட்டில் கடந்த 9-ந்தேதி ஒரு கும்பல் நுழைந்தது. அவர்கள் தங்களை, சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் என்று கூறினர். 

உங்களுடைய வீட்டில் உரிமம் இல்லாமல் துப்பாக்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. எனவே சோதனை நடத்த வந்துள்ளோம் என்றுகூறி வீட்டில் சோதனை நடத்துவது போல் ரூ.12 லட்சம், 45 பவுன் தங்கநகைகளை நூதன முறையில் திருடி சென்றனர்.

இதுதொடர்பாக கே.கே.நகர் போலீசில் பாண்டியன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் போலீஸ் போல நடித்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதனையடுத்து கண்காணிப்பு கேமராவில் சிக்கிய கொள்ளை கும்பலின் கார் பதிவெண் மூலம் போலீசார் நடத்திய விசாரணையில் துப்பு கிடைத்தது.

5 பேர் கைது
அதன் அடிப்படையில் இந்த வழக்கில் சென்னை அசோக்நகரை சேர்ந்த சிவா (வயது 25), திருவொற்றியூரை சேர்ந்த ரூபன் (36), ராஜேந்திரன் (40), சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த அஜித்குமார் (26), திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்த சதீஷ் (31) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 43 பவுன் நகை, ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் 8 செல்போன்கள், 4 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்