போதைப்பொருள் வழக்கில் நடிகர் அர்ஜூன் ராம்பாலிடம் 2-வது தடவையாக விசாரணை

நடிகா் அர்ஜூன் ராம்பாலிடம் 2-வது தடவையாக நேற்று போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர்.

Update: 2020-12-22 00:34 GMT
மும்பை, 

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினர் இந்தி திரையுலகத்தினருக்கும், போதை பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் மும்பையில் உள்ள நடிகர் அர்ஜூன் ராம்பாலின் வீட்டில் சோதனை நடத்தினர்.

மேலும் அவரது வீட்டில் இருந்து மடிக்கணினி, செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களை பறிமுதல் செய்தனர். இதுதவிர நடிகரின் வீட்டில் இருந்து தடைசெய்யப்பட்ட மருந்தையும் அதிகாரிகள் கைப்பற்றி இருந்தனர்.

இதுகுறித்து போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடிகர் மற்றும் அவரது காதலி கேப்ரில்லாவிடம் விசாரணை நடத்தி இருந்தனர். இந்தநிலையில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த வாரம் நடிகர் அர்ஜூன் ராம்பாலுக்கு போதை பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது.

இதையடுத்து சம்மனை ஏற்று அவர் நேற்று காலை 11.30 மணியளவில் தென்மும்பை பல்லர்டு எஸ்டேட் பகுதியில் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு விசாரணைக்காக வந்தார். இதில் அதிகாரிகள் அவரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவர் விசாரணை முடிந்து மாலை 5.30 மணியளவில் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார்.

மேலும் செய்திகள்