விராலிமலை அருகே கட்டையால் தாக்கி விவசாயி கொலை; முதியவர் கைது

விராலிமலை அருகே விவசாயியை கட்டையால் தாக்கி கொலை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-12-22 23:43 GMT
விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா விருதப்பட்டி அருகே உள்ள கடைக்கான் பட்டியை சேர்ந்தவர் மணிவேல் (வயது 44). விவசாயியான இவருக்கும், இவரது பெரியப்பா மகன் சின்னப்பா (65) என்பவருக்கும் சொந்தமான கிணறு அதே பகுதியில் உள்ளது.

நேற்று முன்தினம் இந்த கிணற்றில் மணிவேல் மண் அள்ளியதாக தெரிகிறது. அப்போது, அங்கு வந்த சின்னப்பா, மணிவேலுடன் தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

கொலை

இதில் ஆத்திரம் அடைந்த சின்னப்பா, அருகே கிடந்த கட்டையை எடுத்து மணிவேலின் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னப்பாவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்