மத்திய அரசின் மகளிர் சக்தி விருது பெற விண்ணப்பிக்கலாம்

சமூக சேவை புரிந்த பெண்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் பொருட்டு மகளிர் சக்தி விருது என்ற பெயரில் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின் மூலம் தேசிய விருது வழங்கப்படுகிறது.

Update: 2020-12-26 23:25 GMT
பெரம்பலூர்,

பெண்கள் முன்னேற்றம், சுகாதாரம் பேணுதல், கவுன்சிலிங், பெண்கள்- குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிரான செயல்பாடு போன்றவற்றில் தலைசிறந்த பங்களிப்பு, சமூக சேவை புரிந்த பெண்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் பொருட்டு மகளிர் சக்தி விருது என்ற பெயரில் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின் மூலம் தேசிய விருது வழங்கப்படுகிறது. தகுதி வாய்ந்த நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் www.narishaktipuraskar.wcd.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக வருகிற ஜனவரி மாதம் 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்களும், காலம் கடந்து வரும் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.

தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டிய முந்தைய வாரத்தில் புதுடெல்லியில் இந்திய ஜனாதிபதியால் தனிப்பட்ட நபர்களுக்கான விருதுடன், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். நிறுவனங்களுக்கான விருதுடன் ரூ.2 லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்