சமயபுரம் அருகே பரிதாபம்: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு

வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-01-03 01:29 GMT
சமயபுரம்,

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மருதூர் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 60). கூலித்தொழிலாளியான இவர், வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு தனது கூரை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையின் காரணமாக அவரது வீட்டின் மண்சுவர் பலமிழந்து காணப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்று இரவு மண் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

கூலித்தொழிலாளி பரிதாப சாவு

அந்த சுவர், தூங்கிக்கொண்டிருந்த கோவிந்தன் மீது விழுந்ததால், அவர் இடிபாடுகளுக்குள் சிக்கி, மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுவர் இடிந்து விழுந்த நேரத்தில், அவருடைய மனைவி இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியில் சென்றதால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து வந்த தகவலின் பேரில் சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர், கோவிந்தனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்