காதலியை துப்பாக்கியால் சுட்டு கொன்று வாலிபர் தற்கொலை

மலாடு அருகே வேறொரு வருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட காதலியை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு காதலன் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-01-06 00:47 GMT
மும்பை, 

மும்பை காந்திவிலி லால்ஜிபாடா பகுதியை சேர்ந்தவர் ராகுல் யாதவ் (வயது26). இவர் குரார் பகுதியை சேர்ந்த நிதி மிஸ்ரா(24) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தனர். இவர்களது காதல் விவகாரம் பற்றி அறிந்த நிதி மிஸ்ராவின் பெற்றோர் ராகுல் யாதவை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் நிதி மிஸ்ராவுக்கு வேறொரு வாலிபருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். இது பற்றி அறிந்த காதலன் ராகுல் யாதவ் கடும் ஆத்திரமடைந்தார்.

இதையடுத்து நிதி மிஸ்ராவை தொடர்பு கொண்டு மலாடில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் அருகே தன்னை சந்திக்க வரும்படி அழைப்பு விடுத்தார். இதன்படி நிதி மிஸ்ரா நேற்று முன்தினம் இரவு 9.45 மணி அளவில் அங்கு வந்தார். அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்த போது, ராகுல் யாதவ் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நிதி மிஸ்ராவை நோக்கி சுட்டார்.

இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் பலியானார். காதலி பலியானதை உறுதி செய்த அவர் அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுகொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சதாப்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியை துப்பாக்கியால் சுட்ட பின்னர் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்