விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருபவர் பிரதமர் மோடி கடலூரில் காயத்ரி ரகுராம் பேட்டி

விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருபவர் பிரதமர் மோடி என கடலூரில் பா.ஜ.க. கலை மற்றும் கலாசார பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-10 06:01 GMT
கடலூர்,

கடலூர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நம்ம ஊரு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி தலைவி லலிதா பரணி, பொது செயலாளர் ராதா துரைராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில கலை மற்றும் கலாசார பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு பேசினார். இதில் பா.ஜ.க. மகளிரணியை சேர்ந்த பலர் மண் பானைகளில் பொங்கல் வைத்தனர். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி கிருஷ்ணமூர்த்தி, கோதண்டபாணி அறக்கட்டளை தலைவர் துரைராமலிங்கம் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் வேலு வெங்கடேசன் நன்றி கூறினார்.

பேட்டி

அதனை தொடர்ந்து காயத்ரி ரகுராம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விவசாயிகளின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆண்டுதோறும் கிசான் நிதிஉதவி திட்டம் மூலம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார். கொரோனா காலத்திலும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ரூ.96 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனால் இந்த பொங்கல் விவசாயிகளுக்கு நல்லதொரு, மகிழ்ச்சியான பொங்கல் பண்டிகையாக அமையும்.

மேலும் தமிழ் கடவுள்களை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் திருமாவளவன், தமிழ்நாட்டில் பிறந்தார் எனக்கூறுவதற்கு வெட்கமாக உள்ளது. பணம் சம்பாதிப்பதற்காகவே அவர் தமிழ் கடவுள்களை பற்றி அவதூறாக பேசி வருகிறார். இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறினார்.

மேலும் செய்திகள்