தூத்துக்குடியில் கொட்டும் மழையில் பொங்கல் பொருட்கள் வாங்கிய பொதுமக்கள்
தூத்துக்குடியில் 3-வது நாளாக நேற்று தொடர் மழை பெய்தநிலையிலும் நேற்று கொட்டும் மழையில் பொதுமக்கள் பொங்கல் பொருட்களை வாங்கி சென்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் 3-வது நாளாக நேற்று தொடர் மழையால் முக்கிய சாலைகள், குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாநகரில் ஏற்கனவே பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது. தற்போது மீண்டும் 3 நாட்களாக தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் மக்கள் மீண்டும் தண்ணீரில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மாநகரில் பல இடங்களில் ரோடுகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இந்த மழைநீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காலை முதல் சாரல் மழையும், அவ்வப்போது சற்று பலத்த மழையுமாக பெய்து கொண்டே இருந்தது. இந்த மழை காரணமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்த கரும்பு, பனைஓலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை பாதிக்கப்பட்டது. கொட்டும் மழையிலும் பொதுமக்கள் குடைபிடித்தவாறு பொங்கல் பொருட்களை வாங்கி சென்றனர். காய்கறி மார்க்கெட்டிலும் மழை காரணமாக கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதனால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் சாத்தான்குளத்தில் அதிகபட்சமாக 52.2 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
திருச்செந்தூர் - 17
காயல்பட்டினம் - 12
குலசேகரன்பட்டினம் -- 16
விளாத்திகுளம் - 19
காடல்குடி - 12
வைப்பார் - 26
சூரங்குடி - 28
கோவில்பட்டி - 12
கயத்தாறு - 20
கடம்பூர் - 31
ஓட்டப்பிடாரம் - 3
மணியாச்சி - 19
வேடநத்தம் - 30
கீழஅரசடி - 13
எட்டயபுரம் - 14
சாத்தான்குளம் - 52.2
ஸ்ரீவைகுண்டம் - 28.3
தூத்துக்குடி - 8.