தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்; போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்தனர்.

Update: 2021-01-15 22:24 GMT
கொடைக்கானல் பாம்பார் அருவியின் எழில்மிகு காட்சி; நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்த சுற்றுலா பயணிகள்
களை கட்டிய சுற்றுலா இடங்கள்
பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர். இதனால் சுற்றுலா இடங்கள் களை கட்டின. நேற்று சாரல் மழை பெய்தது.

கொட்டும் மழை மற்றும் கடும் குளிரை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குடைகளை பிடித்தபடி பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, பைன் மரக்காடுகள். தூண்பாறை, மோயர் பாயிண்ட், குணாகுகை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டு களித்தனர். பாம்பார் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவியின் இயற்கை எழில்கொஞ்சும் அழகை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

போக்குவரத்து நெரிசல்
இதேபோல் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தனர். மேலும் ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி போன்றவற்றில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக ஈடுபட்டனர். அதிக வாகனங்கள் வருகையால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டனர். நகர் பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே நீண்ட நாட்களுக்கு பின்னர் சுற்றுலா பயணிகளின் அதிக வருகை காரணமாக நகரில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்