சிவகங்கை அருகே வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்த பெண்கள்; ஒரு கரும்பு ரூ.35 ஆயிரம், எலுமிச்சை ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம்

சிவகங்கை அருகே மதகுபட்டி கீழத்தெரு, மேற்குத்தெரு, சலுகைபுரம் பகுதிகளில் அதிகளவில் ஒரு சமூகத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் காவல் தெய்வங்களாக பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

Update: 2021-01-17 22:33 GMT
மாட்டு பொங்கல் அன்று அம்மனுக்கு பெண்கள் வளையல், மெட்டி, கொலுசு தவிர்த்து வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்தனர். அம்மனுக்கு நேர்த்திக்கடனாக தொட்டில் கரும்பு கட்டினர். விழா முடிந்ததும் மாலையில் கீழத்தெருவில் நேர்த்திக்கடன் கரும்புகள், விரதமிருந்து அம்மன் காலடியில் வைத்த எலுமிச்சை ஆகியவை ஏலம் விடப்பட்டது.

இந்த ஏலத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.கரும்பு, எலுமிச்சையை ஏலம் எடுத்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதனால் அவற்றை போட்டி போட்டு கொண்டு ஏலம் எடுத்தனர். இதில் ஒரு கரும்பு அதிகபட்சமாக ரூ.35,001-க்கும், ஒரு எலுமிச்சை ரூ.15,100-க்கும் ஏலம்போனது.

இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறியதாவது:-

எங்கள் தெய்வங்களுக்கு முன்பு ஏழை, பணக்காரர் என வித்தியாசமின்றி அனைவரும் சமம் என்பதற்காக அணிகலன்கள் அணியாமல் ஒரே மாதிரியாக உடையணிந்து பொங்கல் வைப்போம். இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே விரதம் இருக்க தொடங்கி விடுவோம். ஏலம் எடுப்போருக்கு நினைத்த காரியம் நடப்பதால் ஆண்டுதோறும் ஏலத்தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது என்றனர்.

மேலும் செய்திகள்