காட்டுமன்னார்கோவில் அருகே மின்சாரம் தாக்கி வங்கி உதவி மேலாளர் பலி காப்பாற்ற முயன்ற முதியவரும் இறந்த பரிதாபம்

காட்டுமன்னார்கோவில் அருகே மின்சாரம் தாக்கி வங்கி உதவி மேலாளர் பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற முதியவரும் உயிரிழந்தார்.

Update: 2021-01-18 00:11 GMT
காட்டுமன்னார்கோவில், 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பெருங்காலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேலன். இவருடைய மகன் சத்தியசீலன் (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சத்தியசீலன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

மின்சாரம் தாக்கியது

இதற்கிடையே நேற்று மதியம் சத்தியசீலன் தனது வீட்டில் டி.வி. பார்ப்பதற்காக சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. அந்த சமயத்தில் அவரது வீட்டுக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த உறவினர் பாலுசாமி(60) என்பவர் சத்தியசீலனை மின்சாரம் தாக்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பாலுசாமி அவரை காப்பாற்ற முயற்சி செய்து, சத்தியசீலனை தொட்டார்.

2 பேர் பலி

அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதை பார்த்த அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மின்சாரம் தாக்கி பலியான சத்தியசீலன், பாலுசாமி ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்