திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; ‘2-வது திருமணம் செய்து கொள்வேன்’ என கணவர் மிரட்டியதால் விபரீத முடிவு

ஊத்துக்கோட்டை அருகே 2-வது திருமணம் செய்து கொள்வேன் என்று கணவர் மிரட்டியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-01-18 21:00 GMT
சசிகலா
குடும்ப தகராறு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ராக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 28). இவருக்கும் ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாய் கிராமத்தை சேர்ந்த சசிகலா (25) என்ற பெண்ணுக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு வாசினி (3) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கணவனை விட்டு பிரிந்து நெல்வாய் கிராமத்தில் உள்ள வீட்டில் சசிகலா தனியாக வசித்து வந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் தன் மனைவி வீட்டுக்கு சென்ற பாஸ்கர், அவரிடம் குடும்பம் நடத்த வரும்படி அழைத்து வற்புறுத்தியுள்ளார். ஆனால் சசிகலா கணவருடன் செல்ல மறுக்கவே, குடும்பம் நடத்த தன்னுடன் வரவில்லை என்றால் தான் 2-வது திருமணம் செய்து கொள்ளப்போவதாக பாஸ்கர் மிரட்டி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை
இதனால் மனமுடைந்த சசிகலா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்து வீட்டிற்கு வந்த அக்கம்பக்கத்தினர் ஆபத்தான நிலையில் கிடந்த அவரை மீட்டு, பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சசிகலாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் சசிகலாவுக்கு திருமணமாகி 5 வருடங்களே ஆகி உள்ளதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்