சேரன்மாதேவி அருகே வேன் கவிழ்ந்து சிறுமி உள்பட 3 பேர் காயம்
முக்கூடலை அடுத்த தாளார்குளத்தைச் சேர்ந்த 4 குடும்பத்தினர் நேற்று மதியம் வேனில் உவரி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்ற விழாவில் பங்கேற்க சென்றனர்.
அப்போது சேரன்மாதேவி அடுத்த கங்கனான்குளம் குளக்கரையில் ஒரு வேனின் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் சேரன்மாதேவி தீயணைப்பு துறைக்கும், போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். இதில் வேன் டிரைவர் செல்வம், அதில் பயணம் செய்த எபனேசர் மகள் ப்ரித்திகா (12) உள்பட 3 பேர் காயமடைந்தனர். உடனடியாக ப்ரித்திகாவை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். செல்வம் உள்பட 2 பேருக்கு கரிசல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.