கொடைக்கானலில் மீண்டும் உறைபனி: வாகனங்களில் டீசல் உறைந்ததால் சுற்றுலா பயணிகள் அவதி

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறது. குளிரின் தாக்கம் அதிகரித்தபோதிலும் ஒரு சில நாட்கள் மட்டுமே உறைபனி நிலவியது.

Update: 2021-01-19 05:38 GMT
கொடைக்கானல்,

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறது. குளிரின் தாக்கம் அதிகரித்தபோதிலும் ஒரு சில நாட்கள் மட்டுமே உறைபனி நிலவியது. கடந்த ஒரு மாத காலமாக நீர்ப்பனி நிலவி வந்த நிலையில் நேற்று அதிகாலையில் பல்வேறு இடங்களில் உறைபனி ஆக்கிரமித்தன. அதன்படி கொடைக்கானல் ஏரியை சுற்றியுள்ள ஜிம்கானா பகுதி கீழ்பூமி, பேரிபால்ஸ்ரோடு, செல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் கடுமையான உறைபனி நிலவியது. இதில் கீழ்பூமி பகுதியில், குறைந்தபட்சமாக 7 டிகிரி வெப்பநிலை பதிவானது. இதன் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் டீசல் உறைந்து விட்டது. இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் டிரைவர்கள் அவதிப்பட்டனர்.

இந்தநிலையில் காலை 8 மணி முதல் மீண்டும் கடும் வெப்பம் நிலவியதால் இயல்பு வாழ்க்கை திரும்பியது. கடும் குளிர் மற்றும் உறை பனியின் காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ளதால் வரும் நாட்களில் பனியின் தாக்கம் அதிகரிக்கும். மேலும் அடுத்த மாதம் (பிப்ரவரி) இறுதிவரை குளிர்சீசன் நீடிக்கும் என்றனர்.

மேலும் செய்திகள்