போரூர் அருகே துணிகரம்: பட்டப்பகலில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் வெட்டிக்கொலை; 9 பேர் போலீசில் சரண்

சென்னை போரூர் அருகே பட்டப்பகலில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-01-19 20:30 GMT
கொலை நடந்த இடத்தில் போலீசார் ஆய்வு செய்த காட்சியை படத்தில் காணலாம்.
அரிவாள் வெட்டு
சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம், குருசாமி நகர், பாரதியார் தெருவை சேர்ந்தவர் பொன்னுரங்கம் (வயது 55). இவர் அப்பகுதியில் கேபிள் டி.வி. வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் தனது மகன் தானேஷ்வரனுடன் பழுதான கேபிள் டி.வி. வயர்களை சரிசெய்ய மோட்டார் சைக்கிளில் மதனந்தபுரம் மெயின் ரோட்டில் வந்த போது, ஆட்டோ மற்றும் மொபெட்டில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவர் வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தியது.

இதையடுத்து, ஆட்டோ மற்றும் மொபெட்டில் இருந்து வந்து இறங்கிய 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பொன்னுரங்கத்தை சரமாரியாக வெட்டினார்கள்.

பலி
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகன் தானேஷ்வரன் அவர்களை தடுக்க முயன்ற போது, அவருக்கும் கை மற்றும் காலில் வெட்டு விழுந்தது. மேலும் அவரை கீழே தள்ளிவிட்டு பொன்னுரங்கத்தை சரமாரியாக தலையில் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த கொலை சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் பீதியடைந்து தெறித்து ஓடினர். இதைத்தொடர்ந்து, காயமடைந்த தானேஷ்வரன் தனது தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இந்த கொலை சம்பவம் குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போரூர் உதவி கமிஷனர் அசோகன், மாங்காடு இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், சிட்டிபாபு ஆகியோர் காயமடைந்த தானேஷ்வரனை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

நிலத்தகராறு
மேலும், கொலை செய்யப்பட்ட பொன்னுரங்கம் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில், ஏற்கனவே இருந்த நிலத்தகராறு காரணமாக கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று, பொன்னுரங்கத்தின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததும், அந்த நபரின் செல்போன் நம்பர் குறித்து மாங்காடு போலீசில் பொன்னுரங்கம் ஏற்கனவே புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கொலைவழக்கு தொடர்பாக குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் 9 பேர் சரணடைந்தனர்.

கேபிள் டி.வி. ஆபரேட்டர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்