அந்தியூர் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் சாவு

அந்தியூர் அருகே வேனும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-01-21 17:51 GMT
அந்தியூர்,

சத்தியமங்கலம் கெம்பநாயக்கன் பாளையம் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 48). சத்தியமங்கலம் அருகே உள்ள புளியங்குளம் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராசன் (40). செல்வனும், ராசனும் நண்பர்கள் ஆவர். மேலும் 2 பேரும் விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தனர்.

இவர்கள் 2 பேரும் அந்தியூரில் வேலையை முடித்துவிட்டு அங்கிருந்து சத்தியமங்கலத்துக்கு நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் சென்று ெகாண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை ராசன் ஓட்டினார். அவருக்கு பின்னால் செல்வன் உட்கார்ந்து இருந்தார்.

2 பேர் சாவு

அத்தாணி அருகே தம்மங்கரடு என்ற இடத்தில் சென்றபோது அத்தாணியில் இருந்து அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்த வேனும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் செல்வனும், ராசனும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், செல்வனும், ராசனும் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

டிரைவர் கைது

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் அந்தியூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (43) என்பவரை கைது செய்தனர். இறந்துபோன செல்வனுக்கு லேகா (43) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும், ராசனுக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இறந்த 2 பேரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்