பரப்பாடி அருகே குளத்தில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவன் பலி

பரப்பாடி அருகே குளத்தில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2021-01-21 20:09 GMT
இட்டமொழி,

நெல்லை மாவட்டம் பரப்பாடி அருகே உள்ள வேப்பங்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் அய்யாபிள்ளை (வயது 60). இவரது மகள் பேச்சிசெல்வி (33). இவர் தனது கணவர் கார்த்திக்குமாருடன் (35) கோவையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு சபரிகணேஷ் (10), அபினேஷ் (8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சபரிகணேஷ் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

தற்போது விடுமுறை என்பதால் சபரிகணேஷ், அபினேஷ் ஆகியோர் தனது தாத்தா வீட்டில் கடந்த 2 மாதமாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சபரிகணேஷ், தனது தம்பி அபினேஷ் மற்றும் நண்பர்களுடன் வேப்பங்குளத்தில் உள்ள குளத்தில் குளிக்க சென்றான். அப்ேபாது, நீச்சல் தெரியாததால் சபரிகணேஷ் நீரில் மூழ்கினான்.

குளத்தில் மூழ்கி பலி

இதனால் அதிர்ச்சி அடைந்த அபினேஷ் சத்தம் போட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சபரிகணேஷை மீட்டனர். பின்னர் அவனை முதலுதவி சிகிச்சைக்காக பரப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சபரிகணேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்