மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-21 22:26 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சின்னக்கடை வீதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் வேலு குணவேந்தன், மாநில தேர்தல் பணிக்குழு துணை செயலாளர் ஆக்கூர் செல்வரசு, நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கதிர்வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அமைப்பாளர் மோகன்குமார் வரவேற்று பேசினார்.

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம்

ஆர்ப்பாட்டத்தில் மழையால் பாதித்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். விவசாய சட்டங்களை மாநில அதிகார வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.

குறைந்த பட்ச ஆதார விலை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மழையால் பாதித்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும். மழையால் சேதமடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பது உள்பட பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அறிவழகன், ஞானவல்லி, சதுருதீன், ரியாஸ்கான், கனிவல்லவன், ஞானவல்லி, அன்புச்செல்வன், ஜெய்சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு முன்னாள் மாவட்ட அமைப்பாளர் ஈழவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ராஜமோகன், சீசர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்