பெரம்பலூர் அருகே ஏரிக்குள் தவறி விழுந்த மாணவன் தண்ணீரில் மூழ்கி பலி

பெரம்பலூர் அருகே ஏரிக்குள் தவறி விழுந்த பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான்.

Update: 2021-01-21 23:02 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமம் காட்டு கொட்டகை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் பிரகாஷ்(வயது 13). இவர் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது கொரோனா காரணமாக பள்ளிக்கு விடுமுறையால் வீட்டில் இருந்த பிரகாஷ் நேற்று மதியம் மேலப்புலியூர் மேற்கு கிராமத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ஏரிக்கரை வழியாக நடந்து சென்றபோது, பிரகாஷ் ஏரிக்குள் தவறி விழுந்தார்.

நீச்சல் தெரியாததால் பிரகாஷ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் ஏரியில் இருந்து மீட்டனர். உடலை பார்த்து அவரது பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்