வயலில் புகுந்த பாம்பு கடித்து பெண் சாவு

உத்திரமேரூரில் பாம்பு கடித்து 45 வயது பெண் பரிதாபமாக பலியானார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

Update: 2021-01-26 01:49 GMT
உத்திரமேரூர், 

உத்திரமேரூர் அடுத்த பருத்தி கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணப்பன். இவரது மனைவி வேதவள்ளி (வயது 45). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் வேதவள்ளி வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, அங்கு புகுந்த பாம்பு கடித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரது கணவர் கண்ணப்பன், வேதவள்ளியை மீட்டு, உடனடியாக உத்திரமேரூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடனடியாக மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

இதுபற்றி உத்திரமேரூர் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்