ஜப்தி நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி குடவாசலில், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உண்ணாவிரதம்

ஜப்தி நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி குடவாசலில் மகளிர் சுய உதவிக்குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-28 05:48 GMT
குடவாசல், 

கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் குடவாசல் கிளை அலுவலகம் முன்பு காங்கேயநகரம், திருகுடி, மேலப்பாளையூர் ஆகிய கிராம மகளிர் சுய உதவிக்குழுவினர் இந்த வங்கியில் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வங்கியில் வாங்கிய கடனுக்கு கூடுதலாக வட்டி கட்ட சொல்லி மகளிர் சுயஉதவி குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கடனை கட்ட தவறினால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உண்ணாவிரதம்

இந்தநிலையில் பணம் கட்ட முடியாத நிலையில் வட்டி சதவீதத்தை குறைக்க வேண்டும், கடனை கட்ட கால அவகாசம் வேண்டும், ஜப்தி நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடவாசலில் வங்கியின் எதிரே மகளிர் சுய உதவிக்குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சமூக ஆர்வலர்கள் குடவாசல் சேதுபதி, காங்கேயநகரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். .

தகவலறிந்த குடவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து வங்கி தலைமையிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து உண்ணாவிரதம் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்