வீடு புகுந்து மூதாட்டியின் காதை அறுத்து நகை பறிப்பு

சங்கரன்கோவில் அருகே வீடு புகுந்து மூதாட்டியின் காதை அறுத்து தங்க நகையை மர்மநபர் பறித்துச் சென்றார்.

Update: 2021-02-01 05:16 GMT
சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). இவரின் தாயார் மனோன்மணியம் என்ற வாழை மணியம்மாள் (88). மனோன்மணியம் கணவர் சேதுராமலிங்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மனோன்மணியம் தனது மகன் வீட்டில் வசித்து வருகிறார். 

சம்பவத்தன்று ராமசாமி தனது வீட்டின் மாடியில் உறங்கி கொண்டு இருந்தார். வீட்டின் முன் பகுதியில் உள்ள அறையில் மனோன்மணியம் உறங்கிக் கொண்டிருந்தார்.

நகை பறிப்பு

அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மனோன்மணியத்தின் காதை அறுத்து, காதில் தொங்கிக்கொண்டிருந்த 3¼ பவுன் தங்க கம்மலை (பாம்படம்) எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றார். அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்த்தினர் வருவதற்குள் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த மனோன்மணியத்தை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சங்கரலிங்கபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்