பூலாம்பட்டி அருகே கட்டையால் தாக்கி விவசாயி கொலை: தந்தை, 2 மகன்கள் கைது

பூலாம்பட்டி அருகே கட்டையால் தாக்கி விவசாயி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை மற்றும் 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-02 22:15 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகே உள்ள சித்தனூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 45), விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சேட்டு (50). இவருடைய மகன்கள் ரவி (29), லட்சுமணன் (26). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது பெரியசாமி வீட்டில் வளர்த்து வரும் நாய் அவர்களை பார்த்து குரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ரவி, லட்சுமணன் ஆகியோர் பெரியசாமியிடம் சென்று இதுதொடர்பாக தகராறு செய்தனர். அப்போது அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரவி, லட்சுமணன், சேட்டு ஆகியோர் சேர்ந்து பெரியசாமியை கட்டையால் தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த பெரியசாமி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பூலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் பெரியசாமியை கட்டையால் தாக்கி கொலை செய்ததாக சேட்டு மற்றும் அவருடைய மகன்கள் ரவி, லட்சுமணன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்