திருவள்ளூர் அருகே தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை

திருவள்ளூர் அருகே தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-02-03 05:16 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள மேல்மணம்பேடு மீனாட்சி நகரை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 45). தி.மு.க. பூந்தமல்லி மேற்கு ஒன்றிய துணைச்செயலாளராக இருந்தார். இவருக்கு கோமதி (40) என்ற மனைவியும், கனியமுதன் (20) பருதி (18) என்ற 2 மகன்களும் உள்ளனர்.

கோமதி தி.மு.க. ஊராட்சி செயலாளராக உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு கருணாகரன் வெள்ளவேடு அருகே தனது உறவினர் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என 3 வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென கருணாகரனை சுற்றிவளைத்து அவரை தாங்கள் வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துபோனார்.

மறியல்

இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் மேல்மணம்பேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடு்பட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இது முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்