அரசு ஊழியர்கள் சாலைமறியல்; 154 பேர் கைது

சேலத்தில் அரசு ஊழியர்கள் 4-வது நாளாக போராட்டம் நடத்தினர்.

Update: 2021-02-05 22:36 GMT
சேலம்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தொடர் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த 3 நாட்களாக போராட்டம் நடந்தது. 

இந்த நிலையில், நேற்று 4-வது நாளாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகபெருமாள், கல்வித்துறை பணியாளர் சங்க நிர்வாகி ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம், ஒப்பந்த ஊதியம், அவுட் சோர்சிங் முறையை ரத்து செய்து வரையறுக்கப்பட்ட ஊதிய முறைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 70 பெண்கள் உள்பட 154 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்