வடமாநிலத்தினரின் கடைகளை மூட துண்டு பிரசுரம் வினியோகம்: தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ்நிலையம் முன் தர்ணா

திருச்சியில் வடமாநிலத்தினரின் கடைகளை மூட துண்டு பிரசுரம் வினியோகம் செய்து மிரட்டிய தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியினர் உள்பட 75 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-06 23:26 GMT
தமிழகத்தில் ஜாதி, மத கலவரங்களை உண்டாக்க பா.ஜனதா கட்சி திட்டமிட்டு செயல்படுவதாகவும், இதற்கு மார்வாடி எனப்படும் வடமாநிலத்தவர்கள் பொருளாதார உதவி செய்து வருவதாக குற்றம் சாட்டி நாளை(திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திருச்சியில் உள்ள வடமாநிலத்தினரின் கடைகளை மூடக்கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் துண்டு பிரசுரம் வினியோகித்தனர். 

இதனால் மதுரை ரோடு, பெரிய கம்மாள தெரு, சின்ன கம்மாள தெரு, நடுகுஜிலித்தெரு, பெரியகடைவீதி, பாலக்கரை, காந்தி மார்க்கெட், வளையல்கார தெரு, மேலபுலிவார்டு ரோடு ஆகிய பகுதிகளில் கடை நடத்தும் அனைத்து வடமாநிலத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கட்சியினர் மற்றும் அப்பகுதியில் கடை நடத்திவரும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் நேற்று காலை திருச்சி கோட்டை போலீஸ் நிலையம் முன் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினர் மீது புகார் கொடுத்தனர். 

அத்துடன் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கோட்டை போலீஸ் நிலையம் முன் பா.ஜனதா கட்சியினரும், வடமாநிலத்தினரும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் பவன் குமார் ரெட்டி, வேதரத்தினம் மற்றும் உதவி கமிஷனர் ரவிஅபிராம் மற்றும் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியின் வர்த்தக அணி மாநில நிர்வாகி முரளிதரன் உள்ளிட்ட பா.ஜனதா கட்சியினர் மற்றும் வடமாநிலத்தினர் 75 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் இ.பி.ரோடு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே வடமாநிலத்தினர் கொடுத்த புகாரின் பேரில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின் கீழ் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்