பவானிசாகர் அருகே ஆற்றில் மூழ்கி மாணவர்- என்ஜினீயர் பலி

பவானிசாகர் அருகே நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தபோது ஆற்றில் மூழ்கி மாணவர் மற்றும் என்ஜினீயர் இறந்தனர்.

Update: 2021-02-07 20:05 GMT
பவானிசாகர்
பவானிசாகர் அருகே நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தபோது ஆற்றில் மூழ்கி மாணவர் மற்றும் என்ஜினீயர் இறந்தனர். 
மாணவர்- என்ஜினீயர்
பவானிசாகர் அருகே உள்ள ராஜன் நகர் கஸ்தூரி நகரை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மகன் புவனேஷ்குமார் (வயது 17). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார். 
அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர்கள் ஸ்ரீதர் (21) மற்றும் திருப்பூர் மாவட்டம் அவினாசி வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் பாலமணிகண்டன் (23). இதில் பாலமணிகண்டன் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். 
குளிக்க சென்றனர்
இந்த நிலையில் பாலமணிகண்டன், அவருடைய நண்பர்கள் புவனேஷ், மாரிமுத்து, மதியழகன் மற்றும் புவனேஷ்குமார், ஸ்ரீதர் ஆகியோர் பவானிசாகருக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் பவானிசாகர் பக்குடுதுறையை அடுத்த கரும்பாறை கரை பகுதிக்கு சென்றனர். 
இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்குள்ள பவானி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது புவனேஷ்குமார் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றார். இதில் ஆற்றில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார். இதை கண்டதும் அவரை காப்பாற்ற ஸ்ரீதர் சென்று உள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால் அவரும் ஆற்றில் மூழ்கினார். உடனே அவர்களை காப்பாற்ற பாலமணிகண்டனும், மாரிமுத்துவும் சென்றனர். இதில் அவர்களும் தண்ணீரில் மூழ்கினர். 
சாவு
இதை கவனித்ததும் அருகில் குளித்து கொண்டிருந்தவர்கள் விரைந்து நீந்தி சென்று மாரிமுத்து மற்றும் ஸ்ரீதரை காப்பாற்றினர். ஆனால் புவனேஷ்குமாரும், பாலமணிகண்டனும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று புவனேஷ்குமார் மற்றும் பாலமணிகண்டன் உடலை மீட்டனர். இதைத்தொடர்ந்து பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆற்றில் மூழ்கி பள்ளிக்கூட மாணவர் மற்றும் என்ஜினீயர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்