ஆத்தூர் அருகே கடன் தொல்லையால் விபரீத முடிவு: கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை

ஆத்தூர் அருகே கடன் தொல்லையால் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். 2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Update: 2021-02-10 22:07 GMT
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே கடன் தொல்லையால் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். 2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கடன் தொல்லை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புங்கவாடி கிராமம் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன்-தனலட்சுமி. இவர்களது மகன் வேல்முருகன் (வயது 33). இவரும் அதே பகுதியை சேர்ந்த சத்யா (31) என்பவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அபிநயா (13), சங்கீத் (11) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
வேல்முருகன் சொந்தமாக நெல் அறுவடை எந்திரம் (ஹார்வெஸ்டர்) வைத்து வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். விவசாயமும் செய்து வந்தார். நெல் அறுவடை எந்திரத்துக்காக பலரிடம் வேல்முருகன் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தகராறு
மேலும் கணவன், மனைவி மற்றும் மாமியார் தனலட்சுமி ஆகியோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வெளியில் சென்றிருந்த வேல்முருகன் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போதும் கணவன், மனைவி, மாமியார் தனலட்சுமி ஆகியோர் இடையே கடன் தொல்லை காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன், தனது மனைவி சத்யா மற்றும் குழந்தைகளான அபிநயா (13), சங்கீத் (11) ஆகியோருடன் வீ்ட்டில் இருந்து வௌியேறினார். 
விஷம் குடித்து சாவு
பின்னர் மோட்டார்சைக்கிளில் புங்கவாடியில் இருந்து மஞ்சினி கிராமம் ஆதரவற்றோர் இல்லம் அருகே வந்தார். பின்னர் தாங்கள் தயாராக கொண்டு வந்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குழந்தைகள் இருவருக்கும் வேல்முருகன், சத்யா ஆகியோர் கொடுத்தனர். மீதி மருந்தை  கணவனும், மனைவியும் குடித்தனர். 
அதன்பிறகு வேல்முருகன் தனது நெல் அறுவடை எந்திர டிரைவர் மூக்கன் என்பவருக்கு போன் செய்து நாங்கள் விஷம் குடித்து விட்டோம் என கூறியுள்ளார். உடனே மூக்கன், வேல்முருகனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துவிட்டு சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு 4 பேரும் மயங்கி கிடந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், 4 பேரையும் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே வேல்முருகன், சத்யா ஆகிய இருவரும் இறந்து விட்டனர்.
தீவிர சிகிச்சை
குழந்தைகள் இருவருக்கும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடன் தொல்லையால் கணவன்-மனைவி விஷம் குடித்து விபரீத  முடிவை தேடிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்