செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி போராட்டம்

செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-02-11 19:47 GMT
திருவரங்குளம்
செல்போன்கோபுரம்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள எஸ்.குளவாய் பட்டியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 45). விவசாயி. இவர், அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் வாங்கியுள்ளார். இந்தநிலையில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் இன்னும் 10 நாட்களில் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 
ஆனால், தனக்கு இன்னும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று திருநாவுக்கரசு கூறி வந்ததுடன், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி வங்கியின் அருகே உள்ள செல்போன் கோபுரத்தில் நேற்று ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். 
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் வல்லதிராக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதலில் கீழே இறங்கி வாருங்கள் என்று திருநாவுக்கரசை அழைத்தனர். ஆனால், அவர் கீழே இறங்கி வர மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேசியதன் பலனாக சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு கீழே இறங்கி வந்தார். அவரிடம் அதிகாரிகள், பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து தமிழக அரசு முறையாக அறிவித்த பிறகு உங்களது பயிர்க்கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்