கணவன்-மனைவி போல் நடித்து வாடகைக்கு வீடு எடுத்தனர் - ஆன்லைன் விபசாரம்; 2 பேர் கைது

கணவன்-மனைவிபோல் நடித்து வாடகைக்கு வீடு எடுத்து, அழகிகளை வைத்து ஆன்லைனில் விபசாரம் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-14 05:52 GMT
பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராயலா நகர், 3-வது மெயின் ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சந்தேகப்படும்படியாக வாலிபர்கள் வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராயலா நகர் போலீசார் குறிப்பிட்ட அந்த வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அதில் அங்கு இளம்பெண்ணை வைத்து விபசாரம் செய்தது தெரிந்தது.

இதையடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அழகியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், இதுதொடர்பாக வீட்டில் இருந்த ஆனந்த்(வயது 21), தண்டையார்பேட்டையைச்சேர்ந்த பிலால்(27) இருவரையும் கைது செய்து விசாரித்தனர்.

அதில் விபசார தரகர்கள் 2 பேர், ஒரு ஆண் மற்றும் பெண்ணை கணவன்-மனைவி போல் நடிக்க வைத்து இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து உள்ளனர். பின்னர் பிலால், ஆனந்த் இருவரையும் வீட்டு வேலைக்கு அமர்த்தினர்.

இந்த வீட்டில் அழகிகளை அழைத்து வந்து தங்க வைத்து, ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததும், இதற்காக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்ததும் தெரிந்தது.

இதையடுத்து தலைமறைவான தரகர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்