பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து கள்ளக்குறிச்சி, சங்கராபுரத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து கள்ளக்குறிச்சி, சங்கராபுரத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

Update: 2021-02-22 17:18 GMT
கள்ளக்குறிச்சி 

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் வாக்கில் செல்வநாயகம், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, காமராஜ், லியாகத்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சுப்ராயலு வரவேற்றார். கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஆண், பெண் இருவர் மாலை அணிவிக்கப்பட்ட சமையல் கியாஸ் சிலிண்டரை தலையில் வைத்துக்கொண்டும், விறகு அடுப்புடனும் கண்டனகோஷம் எழுப்பினர். இதில் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மூக்கப்பன், முருகன், சண்முகம், கென்னடி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் பி.கே.முரளி, நகர துணை செயலாளர் அபுபக்கர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சங்கராபுரம்

அதேபோல் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி, ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகம், வசந்தவேல், வைத்தி, முருகன், அன்பு மணிமாறன், நகர பொறுப்பாளர்கள் சிதம்பரம், செந்தில், மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர்கள் நாகராஜன், கமருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொறுப்பாளர் துரைதாகபிள்ளை வரவேற்றார்.

இதில் கலந்துகொண்டவர்கள் பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பாலஅண்ணாமலை, முருகன், தயாளன், சீனு, ரவி, கோவிந்தன், ரமேஷ், கிருபா, மணிகண்டன், முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்