அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது

Update: 2021-02-22 17:30 GMT
திருப்பத்தூர், 
திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் வடக்குத்தெரு கரியமலை சாத்தய்யனார் மற்றும் ராவுத்தராயர் வல்லநாட்டுகருப்பர் கோவில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காளைகள் கண்மாய் பகுதிகள் மற்றும் வயல் பகுதிகளில் ஆங்காங்கே கட்டுகளை அவிழ்த்து அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடந்தது. அப்போது காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்தனர். இதில் மாடு முட்டியதில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இந்தநிலையில் கீழ பட்டமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி சரண்யா, அரசு அனுமதி இல்லாமல் மஞ்சுவிரட்டு நடத்தியதாக கூறி, திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் பட்டமங்கலத்தைச் சேர்ந்த செல்வவிநாயகம், ரவி, பாஸ்கரன், முத்தழகு, கரும்பநாதன் ஆகிய 5 பேர் மீது திருக்கோஷ்டியூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்