பொள்ளாச்சி அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

பொள்ளாச்சி அருகே வீடு புகுந்து 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update: 2021-02-22 23:59 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே வீடு புகுந்து 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வீட்டின் கதவு உடைப்பு

பொள்ளாச்சி அருகே உள்ள ராசக்காபாளையம் சன்ரைஸ் கார்டனை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 34). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். 

இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரது தாய் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு  வீட்டிற்கு வந்தார்.

இதற்கிடையில் மீண்டும் குடும்பத்துடன் கோவையில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு அவர் சென்றதாக தெரிகிறது. பின்னர் நிகழ்ச்சியை முடித்து விட்டு நள்ளிரவு 1 மணிக்கு வீட்டிற்கு வந்தார். 

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று சென்று பார்த்தார். அப்போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை
மேலும் பீரோவில் இருந்த 8 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் வீட்டில் பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 பொள்ளாச்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 

இதன் காரணமாக போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்