வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் மாற்றுத்திறனாளிகள் 20 பேர் கைது

வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-23 14:34 GMT
திருவாரூர்:-
வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 20 பேரை போலீசார் கைது செய்தனர். 
இடஒதுக்கீடு
அரசு வேலை வாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். கடும் ஊனமுற்றவர்களுக்கு மாத உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தெலுங்கானா, புதுச்சேரி மாநிலத்தை போன்று தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். 
தனியார் துறையில் 5 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் குடியேறும் போராட்டத்தினை அறிவித்திருந்தனர்.
20 பேர் கைது
அதன்படி நேற்று திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். 
இதில் மாவட்ட செயலாளர் கெரகோரியா, நிர்வாகிகள் சோமு, ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து திருவாரூர் தாலுகா போலீசார் 9 பெண்கள் உள்பட 20 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்