ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கிலோ ரூ.140-க்கு ஏலம்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கிலோ ரூ.140-க்கு ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-02-23 15:06 GMT
பொள்ளாச்சி,

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு ஆனைமலை சுற்று வட்டார பகுதி மற்றும் உடுமலையில் இருந்து விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்தனர்.

ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில் ஏலம் நடைபெற்றது. இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். அதிகபட்சமாக கிலோவுக்கு கொப்பரை தேங்காய் ரூ.140 வரை ஏலம் போனது. விலை உயர்வு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:-

ரூ.140-க்கு ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்திற்கு 74 விவசாயிகள் 484 மூட்டை கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்தனர். கொப்பரை தேங்காய் தரம் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. 12 வியாபாரிகள் கொப்பரை தேங்காய்களை ஏலம் எடுத்தனர். 

257 மூட்டை முதல் தர கொப்பரை தேங்காய் ரூ.120 முதல் ரூ.140-க்கும், 227 மூட்டை 2-ம் தர கொப்பரை தேங்காய் ரூ.93 முதல் ரூ.105.75 வரை ஏலம் போனது. மார்க்கெட்டில் தேங்காய் எண்ணெய் விலை உயர்ந்து காணப்படுகிறது. 

வரத்து குறைவு 

பெரும்பாலும் தேங்காய்கள் உணவு தேவைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதன் காரணமாக கொப்பரை தேங்காய் வரத்து குறைவாக உள்ளது. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட ரூ.11.30 அதிகமாக ஏலம் போனது. இதுபோன்று இதற்கு முன் விலை உயர்வு இருந்தது இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்