மஞ்சள் காமாலைக்கான ரத்த பரிசோதனை `கிட்' இல்லாததால் நோயாளிகள் அவதி

விராலிமலை அரசு மருத்துவமனையில் மஞ்சள் காமாலைக்கான ரத்த பரிசோதனை ‘கிட்' இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2021-02-23 18:37 GMT
விராலிமலை, பிப்.24-
விராலிமலை அரசு மருத்துவமனையில் மஞ்சள் காமாலைக்கான ரத்த பரிசோதனை ‘கிட்' இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனை
விராலிமலை-மணப்பாறை சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்த இந்த மருத்துவமனை  கடந்த சில வருடங்களுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டது. இங்கு பல் சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை பிரிவு, மகளிர் பிரசவ பிரிவு, சித்த மருத்துவ பிரிவு என தனித்தனியே இயங்கி வருகிறது.மருத்துவமனையின் ஒரு பகுதியில் ரத்த பரிசோதனை செய்வதற்கான பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு ரத்த மாதிரி எடுப்பதற்கான உபகரணங்கள் (கிட்) உள்ளது. ஆனால் கர்ப்பிணிகளுக்கு மஞ்சள்காமாலை உள்ளதா? இல்லையா? என்பதை கண்டறிவதற்கான மஞ்சள்காமாலை பரிசோதனைக்கான உபகரணங்கள் (கிட்) கடந்த ஒரு மாத காலமாக இல்லை. இதனால் கர்ப்பிணிகள் மட்டுமின்றி நோயாளிகளும் அவதி அடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கிராமங்களில் இருந்து வரும் நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து திரும்பி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு மேலாக...
இதுகுறித்து அங்கு பணியில் இருந்தவர்களிடம் கேட்டபோது, மஞ்சள்காமாலை பரிசோதனைக்கான உபகரணங்கள் (கிட்) ஒரு மாதத்திற்கும் மேலாக இங்கு இல்லை. இந்த உபகரணங்கள் புதுக்கோட்டையிலிருந்து எப்போதாவதுதான் வரும். என்றைக்கு வரும் என்பது தெரியாது என்றனர்.
 எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விராலிமலை அரசு மருத்துவமனையில் மஞ்சள்காமாலை பரிசோதனைக்கான உபகரணங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் தேவைப்படும் அனைத்து மருத்துவ உபகரணங்களும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்