15 பவுன் நகை-வெள்ளி பொருட்கள் கொள்ளை

கும்பகோணத்தில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-02-23 20:53 GMT
கும்பகோணம்:
கும்பகோணத்தில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் 
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகர் 7-வது தெருவில் வசித்து வருபவர் பாரதி(வயது 70). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மனைவி அனுசுயா. 
இந்த நிலையில் பாரதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 10 நாட்களாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உதவியாக பாரதியும் சென்னையில் இருந்தார்.
15 பவுன் நகை-வெள்ளி பொருட்கள் கொள்ளை 
இதையடுத்து நேற்று சென்னையில் இருந்து கணவன்-மனைவி இருவரும் கும்பகோணத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி குத்துவிளக்கு, வெள்ளியினால் ஆன பூஜை பொருட்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. 
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு 
இதுகுறித்து பாரதி கும்பகோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.  ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை, வெள்ளிபொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்