கண்ணமங்கலத்தில் தாலிகட்டும் நேரத்தில் திருமணத்திற்கு மறுத்த மணப்பெண்.

கண்ணமங்கலத்தில் தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்திற்கு மறுத்ததால் திருமணம் நின்றது. இதனால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2021-02-25 12:09 GMT
கண்ணமங்கலம்

வரவேற்பு நிகழ்ச்சி

கண்ணமங்கலம் அருகே உள்ள பாளைய ஏகாம்பரநல்லூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஐ.டி.ஐ. முடித்து விட்டு எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வேலங்காடு பகுதியை சேர்ந்த நர்சிங் பயிற்சி முடித்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இவர்கள் திருமணம் நேற்று காலை கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவு மணமக்கள் வரவேற்புடன், விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

திருமணத்திற்கு மறுப்பு

இந்த நிலையில் நேற்று மணமக்கள் இருவரின் வீட்டாரும் திருமணத்திற்கான பணிகளில் தீவிரமாக இருந்தனர். மணமகளுக்கு அலங்காரம் செய்ய சென்றபோது நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். மேற்படிப்பு படிக்க போகிறேன் என்று கூறி திருமணத்திற்கு மறுத்துவிட்டார்.

இதைக்கேட்டு இருவீட்டாரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மணப்பெண்ணை சமரசம் செய்ய முயன்றும் மணமகள் விடாப்பிடியாக திருமணத்திற்கு மறுத்துவிட்டார். 

காரணம் என்ன?

இதனால் மணமகனின் பெற்றோர், உறவினர்கள் சோகத்துடன் திருமண மண்டபத்தில் இருந்து சென்றுவிட்டனர். இதுபற்றி அறியாத உறவினர்கள் சிலர் திருமணத்திற்காக மண்டபத்துக்கு வந்தனர். அப்போது திருமணம் நின்றது குறித்து தெரிந்த உடன் அவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மணப்பெண்ணின் இந்த தீடீர் முடிவுக்கு படிப்புதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் கண்ணமங்கலத்தில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்